பேரழிவைத் தடுக்கத் தவறியதால் அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்வதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது பயனற்றது - சரத் பொன்சேகா


பேரழிவைத் தடுக்கத் தவறியதால் அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்வதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது பயனற்றது. எவர் ஆட்சியில் இருந்தாலும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ள வேண்டும். குறுகிய அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே எதிர்க்கட்சிகள் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவுக்கு புதன்கிழமை (3) கொழும்பில் இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த காலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. யார் ஆட்சியில் இருந்தாலும் இறுதி விளைவு ஒன்றுதான்.இம்முறை மழை மற்றும் வெள்ளம் அதிகமாக இருந்ததால் விளைவுகள் அதிகமாகின.

'முந்தைய ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் நிலைமை அப்படியே காணப்பட்டிருக்கும்.

இலங்கையில் வளங்கள், உபகரணங்கள் மற்றும் மனிதவளம் குறைவாக இருப்பதால் யாராலும் அற்புதங்களைச் செய்ய முடியாது.'கிடைக்கக்கூடிய வளங்கள், உபகரணங்கள் மற்றும் மனிதவளத்தைக் கொண்டு அரசாங்கம் அதிகபட்சமாகச் செய்ய வேண்டும். யாராவது அதிகமாகச் செய்ய விரும்பினால்,அது இங்கே சாத்தியமில்லை.

பேரழிவைத் தடுக்கத் தவறியதால் அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்வதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது பயனற்றது. எவர் ஆட்சியில் இருந்தாலும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ள வேண்டும். குறுகிய அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே எதிர்க்கட்சிகள் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன என்றார்.