பொலிஸ் அதிகாரிகளின் சம்பளம் அர்ப்பணிப்புக்கு போதாது - ஆராய அமைச்சரவை உபகுழு நியமனம்



பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளமானது அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை. சம்பளம் குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு பொலிஸ் குற்ற அறிக்கை பிரிவில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என்பதை நாம் அறிந்துள்ளோம். இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தௌிவுப்படுத்திய நிலையில், அது குறித்து ஆராய அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

அந்த குழுவுக்கு தேவையான அளவு எமது யோசனைகளை நாம் முன்வைத்துள்ளோம். இது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். அதேநேரம் பொலிஸ் துறையில் 32000 பொலிஸ் அதிகாரிகளுக்கு பற்றாக்குறை உள்ளது. இந்த வருடத்தில் 2,500 பேரும், அடுத்த வருடத்தில் 2,700 பேரும் ஓய்வு பெறவுள்ளனர். எனவே அவர்களை யாரும் தடுக்க முடியாது.

இந்நிலையில் பொலிஸ் துறையில் புதிதாக 10000 பேரை சேவையில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னடுக்கப்படும். பொலிஸ் சேவைக்கு கல்வித் தகைமையின் அடிப்படையில் புதிய ஆட்சேர்ப்புக்களை வழங்கவும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.