காத்தான்குடி வாவியில் உயிரிழந்த நிலையில் இராட்சத முதலை மீட்பு



மட்டக்களப்பு, காத்தான்குடி வாவிப் பாதையில் 12 அடி நீளமான இராட்சத முதலையொன்று இன்று வியாழக்கிழமை (15) இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. கடந்த 15 நாட்களுக்குள் இதே வாவியில் முதலை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த மாத இறுதியில் இந்த வாவியில் முதலாவது முதலை இறந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து நேற்றிரவு இரண்டாவது முதலையும் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட முதலை சுமார் 12 அடி நீளம் கொண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

காத்தான்குடி வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்குப் பலமுறை புகார் அளித்திருந்தனர். இவ்வாறான நிலையில், அடுத்தடுத்து முதலைகள் உயிரிழப்பது அப்பகுதி மக்களிடையே மர்மத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கரையொதுங்கியுள்ள இராட்சத முதலையைப் பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அவ்விடத்தில் திரண்டு வருகின்றனர். உயிரிழந்த முதலையை அப்புறப்படுத்துவதற்கும், அதன் இறப்புக்கான காரணத்தைக் கண்டறியவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.