இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆலோசனைத் தொடர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஊடகங்கள் மற்றும் சில குழுக்களால் பரப்பப்படும் தவறான தகவல்கள் காரணமாக இஸ்ரேலில் உள்ளவர்கள் பாதுகாப்பு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், எழும் எந்தவொரு சூழ்நிலையையும் கட்டுப்படுத்த இஸ்ரேலிய இராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்றும் இலங்கைத் தூதரகம் மேலும் அறிவித்துள்ளது.

எனவே, ஏதேனும் ஒரு வகையில் அவசர ஏவுகணைத் தாக்குதல் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகள் ஏற்பட்டால், பின்வரும் நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2025 ஜூன் மாதம் நடத்தப்பட்ட ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களில் எந்தவொரு இலங்கையரும் உயிரிழக்கவில்லை.

இஸ்ரேலிய பாதுகாப்புத் துறையினர் மற்றும் தூதரகம் தொடர்ந்து வழங்கிய விழிப்புணர்வு மற்றும் அவசர சைரன் ஒலிகளுடன் கிட்டத்தட்ட அனைவரும் தாங்கள் வசிக்கும் இடங்கள் அல்லது அதற்கு அருகில் உள்ள பாதுகாப்பு அறைகளில் தஞ்சம் புகுந்ததே இதற்குக் காரணமாகும்.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் வருமாறு:

இஸ்ரேலிய ஊடகங்கள் மற்றும் பாதுகாப்புத் துறையினரால் வழங்கப்படும் அறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோய்களுக்காக மருந்து உட்கொள்பவர்கள் தங்கள் மருந்துகளைத் தமக்கு மிக அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மின்சாரம் துண்டிக்கப்படுதல் அல்லது இணைய அமைப்புகள் செயலிழப்பதால் தொலைபேசிகள் இயங்காமல் போனால், இலங்கையில் உள்ள உறவினர்கள் தேவையற்ற முறையில் பதற்றமடைவதைத் தவிர்க்கவும்.

திறந்த வெளிகளில் பணிபுரிபவர்கள் தங்கள் பணி நேரத்தில் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டால், தமக்கு மிக அருகில் உள்ள பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புக வேண்டும்.

வாகனங்களில் பயணிக்கும்போது அவசர நிலை ஏற்பட்டால், வாகனத்தை விட்டு இறங்கி அருகில் உள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவும்.

எதிர்வரும் நாட்களில் இஸ்ரேலுக்கு வர எதிர்பார்க்கும் நபர்கள் தற்போதைய சூழ்நிலை குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவிக்கிறேன்.

இன்று (15) தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டும், நாளை (16) மற்றும் நாளை மறுதினம் (17) இஸ்ரேலிய அரசின் வார இறுதி விடுமுறை காரணமாகவும் தூதரகம் மூடப்பட்டிருந்தாலும், எதிர்பாராத அவசர நிலை ஏற்பட்டால் அவசர சேவைகளுக்காக தூதரகம் திறந்திருக்கும் என்பதைத் தயவுடன் கவனத்தில் கொள்ளவும்.

இதற்கிடையில், ஈரானில் உள்ள தனது குடிமக்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை கூடிய விரைவில் ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு அறிவித்துள்ளது.

அதற்கு மேலதிகமாக, தோஹாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களில் உள்ளவர்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், இப்பிராந்தியத்தின் ஊடாக பயணிக்கும் சில விமான சேவைகளை இடைநிறுத்தவோ அல்லது மட்டுப்படுத்தவோ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தென்படுவதாகவும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் எழும் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பு மிகச் சிறப்பாகத் தயார் நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.