30 இலட்சம் ரூபா போதை மாத்திரைகளுடன் மூவர் கைது


30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைமாத்திரைகளுடன் தம்பதியினர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை மற்றும் எகொடஉயன பிரதேசங்களைச் சேர்ந்த 37, 20 மற்றும் 19 வயதுடையவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, பாணந்துறை உடஹமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 20,000 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் 23,000 ரூபா மாதாந்த வாடகைக்கு வீடொன்றைப் பெற்று, அங்கிருந்து இந்த போதை மாத்திரை வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.