பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முதலில் கொண்டுவாருங்கள் எதிர்க்கட்சியிடம் அமைச்சர் பிமல் கோரிக்கை, பலவீனத்தை மக்கள் அறிந்துகொள்வார்கள் எனவும் தெரிவிப்பு


பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு முன்னர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவேண்டும். அப்போது தான் எதிர்க்கட்சியினரின் பலவீனத்தைநாட்டு மக்கள் விளங்கிக்கொள்வார்களென போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச சகலவிதமான முறையற்ற செயற்பாடுகளுக்கும் துணைசெல்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை (31) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

புதிய கல்வி மறுசீரமைப்பை கைவிடவில்லை. எதிர்க்கட்சியினரால் தோற்றுவிக்கப்பட்ட தவறான நிலைப்பாட்டையும், பாடப்புத்தக தயாரிப்பின் போது ஏற்பட்ட குறைபாட்டையும் நிவர்த்தி செய்வதற்காகவே ஆறாம் தரத்துக்கான கல்வி மறுசீரமைப்பு 2027 ஆம் ஆண்டு வரை பிற்போடப்பட்டது.

புதிய கல்வி மறுசீரமைப்பின் போது தேசிய கல்வி நிறுவகம் இரு இடத்தில் தவறிழைத்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.அந்த தவறு திருத்திக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், தவறிழைத்தவர்களுக்கு நாட்டின் சட்டத்தின் பிரகாரமும், தாபன விதிக்கோவையின் பிரகாரமும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வியையும் எதிர்க்கட்சித் தலைவர் தனது வங்குரோத்து அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டார். முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் போலி என்று நிரூபித்ததன் பின்னர் தாங்கள் கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

பிற்போட்ட கல்விக் கொள்கையை உடன் அமுல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தற்போது குறிப்பிடுகிறார். உண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சுய சிந்தனையுடன் தான் பேசுகிறாரா என்பது தெரியவில்லை.

கல்விக் கொள்கைக்கு எதிராக இரண்டு பிரதான ஊடகங்கள் மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்து தவறான நிலைப்பாட்டையே கொண்டு சென்றது. இந்த இரண்டு ஊடகங்களும் வங்குரோத்து நிலையடைந்துள்ளன. அதேபோன்று எதிர்க்கட்சிகளும் வங்குரோத்து நிலையடைந்துள்ளன.

புதிய கல்வி மறுசீரமைப்பை முன்னிலைப்படுத்தி கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதாக குறிப்பிட்டார்கள். இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை வெகுவிரைவில் கொண்டுவருமாறு குறிப்பிட்டோம்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் பிரதமர் சுவிஸ்லாந்தில் இருந்து நாடு திரும்பியவுடன் சபைக்கு நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டார்.பிரதமரும் நாட்டுக்கு வந்துவிட்டார்.ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்துக்கு வரவில்லை.

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் பதவி நீக்கப்பட்ட விவகாரத்தில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதாக எதிர்க்கட்சியினர் தற்போது குறிப்பிடுகிறார்.

பிரதி செயலாளர் நாயகத்தை பதவி நீக்குவது தொடர்பில் ஆராய்ந்த குழுவில் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலகவும் கலந்துக் கொண்டார். ஆகவே எதிர்கட்சித் தலைவர் மேலதிக தகவல்களை கயந்த கருணாதிலகவிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றார்.