பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்றைய தினம் (26) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாமல் ராஜபக்ஷவின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்கும் திராணியற்ற தமிழ் மாணவர் அமைப்புகளே இந்த எதிர்ப்புகளை முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தின் தலைவியின் கூற்றுப்படி, நாமல் ராஜபக்ஷவுடன் விவாதிப்பதற்கும் கேள்விகளை எழுப்புவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும், தமது பாதுகாப்பைக் காரணம் காட்டி அவர் முன்னால் நேரடியாகக் கேள்வி கேட்க தமக்கு முடியாது என தமிழ் மாணவர் அமைப்புகள் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம் நாமல் ராஜபக்ஷவின் ஆளுமைக்கு முன்னால் முதுகெலும்புடன் நின்று பேச இவர்களுக்கு முடியாது என்பது உறுதியாகியுள்ளதோடு, சுதந்திரமான பேச்சு மற்றும் விவாதங்களுக்குப் புகழ்பெற்ற இத்தகைய சர்வதேச பல்கலைக்கழகங்கள் பிரிவினைவாத தமிழ் மாணவர் அமைப்புகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து தமது கலாசாரத்தைக் காட்டிக் கொடுத்தமை வருத்தத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை குறித்து கருத்துத் தெரிவித்த சரத் வீரசேகர, இது கத்தோலிக்க திருச்சபையையும் ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களையும் ஏமாற்றுவதற்காக அரசாங்கம் ஆடிய ஒரு நாடகம் எனச் சாடினார்.
விவசாயிகளின் சாபம் மற்றும் நிலக்கரி மோசடிகளில் சிக்கியுள்ள அரசாங்கம், மக்களின் கவனத்தை திசைதிருப்பவே சலேயைக் கைது செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.
2018இல் சலே சஹ்ரானைச் சந்தித்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்றும், அந்த காலப்பகுதியில் சலே மலேசியாவிலும் இந்தியாவிலும் பணியாற்றி வந்தமையால் அவர் இலங்கையிலேயே இருக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
அத்துடன், ரணில் விக்ரமசிங்க நியமித்த குழுவும் அசாத் மௌலானாவின் குற்றச்சாட்டு பொய் என்பதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், சிறந்த புலனாய்வு அதிகாரியான சலேவைச் சிறையில் அடைத்துவிட்டு, தாக்குதலுக்கு நிதியுதவி செய்த இப்ராஹிம் போன்றவர்களை வெளியே நடமாடவிடுவது நியாயமற்றது என அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை (Diaspora) திருப்திப்படுத்துவதற்காகவே செயற்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், டயஸ்போராவுக்கு நோகும் என்பதால் ஜனாதிபதி இன்று 'ரணவிருவா' என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை என்றும், சுதந்திர தினத்தில் இராணுவத் தளபாடங்களைக் காட்சிப்படுத்தாததற்கும் இதுவே காரணம் என்றும் தெரிவித்தார்.
சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சூழ்ச்சியாளர்களின் சொற்களைக் கேட்காமல் மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை வென்று ஈழக் கனவைத் தகர்த்த காரணத்தினாலேயே ராஜபக்ஷ குடும்பத்தின் மீது சர்வதேசமும் டயஸ்போராவும் இன்றும் வைரம் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
இவ்வாறான பிரிவினைவாத சக்திகளின் அழுத்தங்களுக்குப் பணியாமல் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற நிறுவனங்கள் எதிர்காலத்தில் தமது கொள்கைகளை நிலைநாட்ட வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாகவும் சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்.













