விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் தப்பியோட்டம் !


களுத்துறை நீதவான் நீதிமன்றினால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வஸ்கடுவ பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை (9) சுமார் 2330 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியல் உத்தரவை பெற்றுள்ளார்.

பின்னர் குறித்த சந்தேக நபர், சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட வேளையில் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பிச் சென்ற சந்தேக நபரை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.