மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு



மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலினால் இதுவரையில் இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
 
அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் ஊடாக, அங்கிருக்கும் இலங்கையர்கள் பின்பற்ற வேண்டிய விசேட வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வழிகாட்டல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.​ை

பஹ்ரைனில் இலங்கையர்கள் தங்கியிருந்த நகரொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், அங்குள்ள இலங்கையர்கள் எவருக்கும் காயங்களோ அல்லது ஆபத்தோ ஏற்படவில்லை என அந்த அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, அவசரத் தேவைகள் ஏற்படும் பட்சத்தில் அது குறித்து அறிவிப்பதற்கான விசேட அவசரத் தொலைபேசி இலக்கங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த இலக்கங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.