2.8 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு – அமைச்சர் அருண ஜயசேகர


தெற்கு கடற்பரப்பில், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் இருந்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 2.8 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த படகு மற்றும் போதைப்பொருள் என்பன திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது, 103 கிலோகிராம் ஹெரோயின், சுமார் 01 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் குறித்த படகில் இருந்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் இந்த போதைப்பொருட்களை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இது பாரிய அளவிலான கடத்தல் நடவடிக்கையாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.