அரச வைத்தியசாலை கிளினிக் நோயாளர்களுக்கு இனி 2 மாதங்களுக்குரிய மருந்துகள் ஒரே தடவையில் வழங்கப்படும்: சுகாதார அமைச்சு !


அரச வைத்தியசாலைகளின் கிளினிக்குகளுக்கு வருகை தரும் நோயாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு வழங்கப்படும் மருந்துகளை, இனிமேல் ஒரே தடவையில் இரண்டு மாதங்களுக்கு வழங்குமாறு சுகாதாரத்துறையினர் அனைத்து வைத்தியசாலை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி எரிசக்தி முகாமைத்துவத்தை கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நோயாளர்களுக்கு ஏதேனும் அவசரத் தேவை ஏற்படின் வழமை போன்று கிளினிக்குகளுக்கு வர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய நிலையங்களில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பல்வேறு கிளினிக்குகள் செயற்பட்டு வருகின்றன.

எரிசக்தி நெருக்கடி காரணமாக பல்வேறு சவால்கள் எழுந்துள்ள போதிலும், வைத்தியசாலைகளின் அறுவை சிகிச்சை நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி மேலும் தெரிவித்தார்.