கொக்கட்டிச்சோலையில் கணவனால் தீ வைக்கப்பட்டு படுகாயமடைந்த மனைவி 2 மாதங்களின் பின் உயிரிழப்பு


கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், தீயில் படுகாயமடைந்த மனைவி சிகிச்சை பெற்று, வீடு திரும்பி, இரண்டு மாதங்களின் பின்னர், இன்று செவ்வாய்க்கிழமை (24) உயிரிழந்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை முனைக்காடு, நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜனவரி 17ஆம் திகதி இந்தப் பெண்ணின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கணவன் தீ வைத்ததில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனையடுத்து, பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு கடந்த ஜனவரி 20ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவ்வேளை அவரை எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் படுகாயமடைந்த பெண் 10 நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவிட்டு, பின்னர், வீடு திரும்பியுள்ளார்.

அவர் வீடு திரும்பி இரண்டு மாதங்களின் பின்னர், இன்று காலை வீட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.