50 இலட்சம் இலஞ்சம் வாங்கிய வர்த்தகர் விளக்கமறியலில்: கொழும்பு பிரதான நீதவான் பிறப்பித்த அதிரடி உத்தரவு !


சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப உறுப்பினர்களிடம் 50 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட வர்த்தகரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (03) உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடையவில்லை என இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னரே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

2021 ஆம் ஆண்டு சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதாகக் கூறி, குறித்த சந்தேகநபரின் குடும்ப உறுப்பினர்களிடம் 50 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற சம்பவம் தொடர்பிலேயே இந்த சந்தேகநபர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.