9 நாட்களில் ஒன்றரை மாத கால எரிபொருள் விநியோகம்; முறைகேடுகளைத் தடுக்க இன்று முதல் விசேட சோதனை !


மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஆரம்பமான முதல் 10 நாட்களுக்குள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக 57,000 மெற்றிக் தொன் டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

இதே காலப்பகுதியில், 47,000 மெற்றிக் தொன் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவிக்கையில்,

இந்த விநியோகத்தில் இரண்டு கப்பல்கள் மூலமான எரிபொருள் கையிருப்பும் உள்ளடங்கியிருந்தது. எரிபொருளுக்கான கேள்வி சடுதியாக அதிகரித்ததால், இவை வெறும் ஒன்பது நாட்களுக்குள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

பொதுவாக ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் விநியோகிக்கப்படும் அளவே இவ்வாறு குறுகிய காலத்தில் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கையிருப்பு மற்றும் விற்பனை சரிபார்ப்பு நடவடிக்கைகள் திங்கட்கிழமை (16) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனிப்பொருள் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நிலையத்திற்கும் வழங்கப்பட்ட எரிபொருளின் அளவு மற்றும் கியூ .ஆர் குறியீட்டு முறைமையின் கீழ் விற்பனை செய்யப்பட்ட அளவு ஆகியவற்றை அதிகாரிகள் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.

இந்தத் தரவுகளைச் சேகரித்து சரிபார்க்கும் முறை ஏற்கனவே வடிவமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரவுகளில் ஏதேனும் முரண்பாடுகள் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட எரிபொருள் நிலையத்தின் இயக்க உரிமத்தை இரத்து செய்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.