கஞ்சா கலந்த மதன மோதகம் மீட்பு: இரு வர்த்தக நிலையங்கள் முற்றுகை !



தம்புத்தேகம நகரிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் தம்புத்தேகம பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சுமார் 987 கிலோகிராம் எடையுடைய கஞ்சா கலந்த "மதன மோதகம் " போதைப்பொருள் தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை (27) பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

முதலாவது வர்த்தக நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், 08 கிலோ 110 கிராம் நிறையுடைய 488 மதன மோதக பொதிகள் மற்றும் இரண்டாவது வர்த்தக நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், 979 கிலோ 100 கிராம் நிறையுடைய 63,248 மதன மோதக பொதிகள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.

சம்பவம் தொடர்பாக 29 மற்றும் 45 வயதுடைய தம்புத்தேகம மற்றும் காலதிவுல்வெவ பகுதிகளைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியின் பெறுமதி மற்றும் விநியோக வலையமைப்பு குறித்து தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஈடுபட்டுவருகின்றனர்.