கோட்டாபயவை விட மோசமான தலைவிதி ஜனாதிபதிக்கு காத்துக்கொண்டிருக்கிறது - ஹரீன் பெர்னாண்டோ


உண்மையான நெருக்கடிகளை மறைத்து, ஜனாதிபதி அழகிய கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் தற்போதைய நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் பொருளாதாரக் கையாளுகை குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நெருக்கடி காலத்தில் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டுச் சென்றார் என்பதைச் சுட்டிக்காட்டிய ஹரீன், ஆனால் தற்போதைய ஜனாதிபதிக்குத் தேடிக் கண்டுபிடிக்க முடியாதவாறு தப்பியோட வேண்டிய நிலையே ஏற்படும் என எச்சரித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டுக்காகப் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் சேமித்து வைத்துவிட்டுச் சென்ற 6 பில்லியன் டொலர் அந்நியச் செலாவணி கையிருப்பு மாத்திரமே இன்று எஞ்சியுள்ள ஒரே பலம் என்றும், அதனைத் தவிர இந்த அரசாங்கத்திடம் எந்தவொரு நிதி முகாமைத்துவ திட்டமும் இல்லை என்றும் அவர் சாடினார்.

தற்போதைய அரசாங்கம் தாங்கள் திருடவில்லை எனக் கூறிவருவது வேடிக்கையானது எனக் குறிப்பிட்ட அவர், இவர்கள் நாட்டுக்காக எந்தவொரு உருப்படியான வேலையையும் செய்யாததால்தான் திருடுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது என்றார். எதனையாவது செய்ய முற்பட்டால் அது முதல் முயற்சியிலேயே படுதோல்வியில் முடிவதாகவும், பொருளாதார வீழ்ச்சிக்குத் தான் பொறுப்பல்ல மாறாக உலகப் போரே காரணம் என ஜனாதிபதி கூறி வருவது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அவர் தெரிவித்தார்.

எதனையும் கண்மூடித்தனமாக நம்பும், சிந்திக்கும் திறனற்ற மக்கள் இருக்கும் ஒரு நாடு ஒருபோதும் முன்னேறப் போவதில்லை என அவர் கவலை வெளியிட்டார்.

அரசாங்கம் எதனைக் கையிலெடுத்தாலும் அதில் தோல்வியே மிஞ்சுகிறது என்பதற்கு எரிவாயு விநியோகம் மற்றும் 'QR' முறைமையே சாட்சி எனத் தெரிவித்த அவர், நாட்டில் போதுமான அளவு எரிபொருள் உள்ளது என்றால் ஏன் இன்னும் வரிசைகள் காணப்படுகின்றன எனக் கேள்வி எழுப்பினார்.

கப்பல்கள் வரிசையாக வரும் என்று தொடர்ச்சியாகப் பொய்க் கதைகளைக் கூறி வந்தவர்கள், இப்போது ஏதோ ஒரு நாளில் ஒரு கப்பல் வரும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் வாக்குறுதிகள் அனைத்தும் இன்று நகைச்சுவையாக மாறிவிட்டதோடு, எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறன் இந்த ஆட்சியாளர்களிடம் இல்லை எனவும் ஹரீன் பெர்னாண்டோ கடுமையாக விமர்சித்தார்.