கடந்த வாரம் வழங்கிய வாக்குறுதியை ஒரு வாரம் முடிவதற்குள்ளேயே மீறும் ஒரு ஜனாதிபதி - சாகர காரியவசம்



கடந்த வாரம் வழங்கிய வாக்குறுதியை ஒரு வாரம் முடிவதற்குள்ளேயே மீறும் ஒரு ஜனாதிபதி இந்த நாட்டிற்கு கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

திங்கட்கிழமை (16) பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை இளம் தொழில்முனைவோர் வர்த்தக சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க மாட்டேன் என இருமுறை உறுதியளித்த போதிலும், அந்த வாக்குறுதி ஒரு வாரத்திலேயே மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

நாட்டின் தொழில்முனைவோர் பொருளாதாரத்திற்கு எவ்வாறு பங்களிக்கிறார்கள் என்பது கூட புரியாத ஒரு ஜனாதிபதி நாட்டை வழிநடத்துவது கவலைக்குரியது என அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் கோவிட் பெருந்தொற்று மற்றும் உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அப்போதைய அரசாங்கம் மக்களுக்கு தடையின்றி உணவு மற்றும் எரிபொருளை வழங்கியதை நினைவுபடுத்திய அவர், அக்காலப்பகுதியில் ஜே.வி.பி உள்ளிட்ட தரப்பினர் போராட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததாகக் குற்றஞ்சாட்டினார்.

ஆனால் இன்று எவ்வித பாரிய நெருக்கடிகளும் இல்லாத சூழலில், எரிபொருள் வரிசைகளை உருவாக்கி, QR குறியீடுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் குழப்பமான நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாக அவர் விமர்சித்தார்.

அத்துடன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்த சாகர காரியவசம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கின் சாட்சியாளரை தனிப்பட்ட முறையில் அழைத்து, அரசியல்வாதிகளின் பெயர்களை உள்ளடக்கி வாக்குமூலம் வழங்குமாறு அச்சுறுத்தியதாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டினார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜே.வி.பி.யின் தீவிர செயற்பாட்டாளர் என நந்தன குணதிலக்க பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய நிலையில், அவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

இன்று நாட்டில் ஜனநாயகம் புதைக்கப்பட்டு வருவதாகவும், போலியான சாட்சியங்களை உருவாக்கி அரசியல் எதிரிகளை சிறையிலடைக்க முயற்சிக்கும் ஒரு அபாயகரமான போக்கு நிலவுகிறது என்பதை நாட்டு மக்களுக்கு பொறுப்புடன் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.