2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் கீழ் அதிகரிக்கப்பட்ட மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை நாளை (10) முதல் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனவரி மாதத்திற்குரிய 10,000 ரூபாய் இவ்வாறு வைப்பிலிடப்படும் என லலித் அத்துலத்முதலி மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் தலைவர், ஓய்வுபெற்ற நீதியரசர் விஜித் மலல்கொட தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் 7,500 ரூபாயாக இருந்த இந்தக் கொடுப்பனவு, தற்போது 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவுக்கான செலவீனங்களை லலித் அத்துலத்முதலி மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக திறைசேரி இணைந்து பொறுப்பேற்கின்றன.
தற்போதைய நடைமுறைகளின்படி, புலமைப்பரிசில் கொடுப்பனவில் 48 சதவீதத்தை மஹபொல அறக்கட்டளை நிதியமும், எஞ்சிய 52 சதவீதத்தை அரசாங்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாகவும் வழங்குகின்றன.
மேலும், 2025 ஏப்ரல் மாதம் முதல் 2026 ஜனவரி வரையான காலப்பகுதிக்குள் மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு இரண்டு முறை திருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 5,000 ரூபாயாக இருந்த புலமைப்பரிசில் கொடுப்பனவு, இரண்டு தடவைகள் தலா 2,500 ரூபாய் வீதம் அதிகரிக்கப்பட்டு 10,000 ரூபாய் வரை இரும மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.













