
மீன் விற்பனை செய்வது போல நடித்து, மிகவும் சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை கல்முனை தலைமையக பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கல்முனை கடற்கரை வீதியில் மீன் வியாபாரம் என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஊழல் ஒழிப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர்களான முஸ்தபா மற்றும் குமாரசிங்க தலைமையிலான குழுவினர் மின்னல் வேகத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இந்த அதிரடிச் சோதனையின் போது 49 மற்றும் 23 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 40 மற்றும் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் சிக்கி விடுதலையானவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பொலிஸாரிடம் சிக்கிய அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், அவருக்கு உதவியாக இருந்த மீன் வியாபாரியும் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். "வியாபாரி மற்றும் உதவியாளர்" என்ற போர்வையில் இவர்கள் நீண்டகாலமாக இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்தமை அம்பலமாகியுள்ளது.
கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தர உள்ளிட்ட உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளின் நேரடி வழிகாட்டலில் இந்தச் சோதனை நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. கைதானவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












