பனங்காடு பாலத்தடியில் ஆணின் சடலம்! - அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் !


பனங்காடு பாலத்தடியில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை அடையாளம் காண அக்கரைப்பற்று பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் புதன்கிழமை (18) ஆணின் சடலம் அக்கரைப்பற்று பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆணின் சடலமொன்று மிதந்த நிலையில் கிடப்பதாக குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

முதலைக்கடியால் இந்த மரணம் இடம்பெற்றதா அல்லது தற்கொலையா அல்லது கொலை செய்யப்பட்டு சடலம் ஆற்றில் வீசப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்த நபர் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரம் மற்றும் சுமார் 45 முதல் 50 வயது வரை மதிக்கத்தக்கவராக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் நீண்ட நாட்களுக்கு முன்னரே உயிரிழந்த நிலையில் சடலம் காணப்பட்டுள்ளதுடன் சடலம் இனங்காண முடியாத வகையில் சிதைந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் காணாமற்போன நபர்கள் தொடர்பில் எதுவித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உயிரிழந்தவரை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆலோசனைக்கு அமைய அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.