மட்டக்களப்பு நெல்லிக்காடு கொ.லை சம்பவம் - நாளை நீதி கோரி பேரணி ; சாணக்கியன் பங்கேற்பு



 மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து, காயமடைந்த நிலையில் ஒரு பெண்ணும், சடலமாக இன்னொரு பெண்ணும் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண், கடந்த 28.02.2026 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த மண்முனை நாற்பதாம் கிராமத்தைச் சேர்ந்த நளாயினி என அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று (26.03.2026) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் இல்லத்திற்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பாராளுமன்ற உறுப்பினரிடம்,
“இந்த வழக்கில் கொலையாளிகளுக்கு சார்பாக எந்தவொரு சட்டத்தரணிகளும் ஆஜராகக் கூடாது”
என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த படுகொலைக்கு நீதி கோரி, 27.03.2026 ஆம் திகதி காலை 08.00 மணிக்கு, மட்டக்களப்பு காந்திப் பூங்காவிலிருந்து மட்டக்களப்பு கச்சேரி வரை கவனயீர்ப்பு பேரணி ஒன்று மண்முனை நாற்பதாம் கிராம மக்களால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்,

“எமது படுவான்கரைப் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்தக் கொடூரச் சம்பவம் உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இந்தப் பெண் காணாமல் போனதாக தகவல் அளிக்கப்பட்ட பின்னரும், காவல்துறையினர் தாமதமாகவே விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். காவல்துறையின் அலட்சியமான அணுகுமுறையே அடுத்தடுத்த குற்றச்செயல்கள் மற்றும் கொலை முயற்சிகளுக்கான சூழலை உருவாக்கியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு நீதியான தீர்ப்பு கிடைக்க வேண்டும். ஆகையால், நாளை நடைபெறவுள்ள கவனயீர்ப்பு பேரணியில் நானும் கலந்து கொள்வேன்”எனத் தெரிவித்துள்ளார்.