இந்த அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொள்ளத் தேவையான எந்த திட்டங்களையும் இன்னும் வகுக்கவில்லை ; சஜித் பிரேமதாச


பல துறைகளில் நாடு கடும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வருகின்றன. மத்திய கிழக்கு போர் உருவாவதற்கு நாம் காரணமாக இல்லாவிட்டாலும், இந்த போர் நிலை பல சவால்களை எமக்கும் உருவாக்கியுள்ளது. இந்தப் போர் 3 வாரங்களுக்கு முன்பு தான் ஆரம்பித்தது என்று பலர் நினைத்தாலும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்தே அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

களனிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்களைத் தெளிவூட்டும் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு நடந்த சர்வதேச நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்திருந்தால், வினைத்திறமையான அரசாங்கம் இதைவிட மோசமான போர்ச்சூழலொன்று வரும் என்று முன்கூட்டியே கணிக்க வேண்டியிருந்தும் இந்த அரசாங்கம் அதை செய்யவில்லை.

ஈரான் மீதான தாக்குதல், வெனிசுலா ஜனாதிபதியை அமெரிக்க இராணுவம் கைது செய்தது, கியூபாவில் நடந்த உள்நாட்டு பிரச்சினைகள், எண்ணெய் கப்பல்கள் நுழைய அனுமதிக்காமல் இருந்தமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் எழுந்தன.

ஒரு நாட்டை ஆளும்போது உலகில் நடப்பவற்றை புரிந்துகொள்ள வேண்டும். சூழ நடக்கும் விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். ட்ரம்ப் ஜனாதிபதியின் சர்வதேசக் கொள்கையை பார்க்கும்போது மத்திய கிழக்கு போர் நிலையை முன்கூட்டியே கணித்திருக்க முடியும். ஆனால் இந்த அரசாங்கம் அதை செய்யவில்லை.

தரமற்ற நிலக்கரி காரணமாக நுரச்சோலை மின் நிலையம் கூட நியமிக்கப்பட்ட அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றது. இந்நிலையில் அரசாங்கம் அலட்சியமாக இருப்பதால் நாட்டு மக்களும் நாடும் மிகப்பெரிய ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் இறக்குமதி செய்தது தரமற்ற நிலக்கரியே என்று நுரச்சோலை மின் நிலையத்தின் நேரடி அறிக்கைகள் காட்டுகின்றன. அரசாங்கம் இவை தரமற்ற நிலக்கரி இல்லை என்று கூறினாலும், நேற்றும் 113 மெகாவோட் குறைவாகவே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இதனால் எரிபொருள் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதால் மின் கட்டணம் அதிகரிப்பும் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படும். விரைவில் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது .

தரமற்ற நிலக்கரி திருட்டை மூடி மறைப்பதற்கே மின் கட்டணத்தை அதிகரிக்கப் பார்க்கின்றனர். எரிபொருள் மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதால் ஏற்படும் மேலதிக செலவை மின்சார நுகர்வோர் மீது சுமத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த தரமற்ற நிலக்கரியால் குறைந்த மின்சாரம் உற்பத்தியாவதுடன் மின் நிலைய உபகரணங்களுக்கு சேதமும், சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளிட்ட பல பெரும் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன

எதிர்க்கட்சி கருத்துக்களை முன்வைக்கும்போது அதற்கான இடத்தையும் தடுக்க அரசாங்கம் முயல்கிறது. எதிரக்கட்சியாக நாம் கருத்துக்களை முன்வைக்கும் போது சேறுபூச மட்டுமே இந்த அரசாங்கத்திற்கு நன்கு தெரிந்த விடயமாக காணப்படுகின்றன.

நாட்டில் கடுமையான பிரச்சினைகள் எழுந்து காணப்படும் நிலைக்கு மத்தியிலும் புதன்கிழமை பாராளுமன்ற அமர்வுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி முன்வைக்கும் கருத்துக்களை இந்த அரசாங்கம் கணக்கில் எடுக்கவில்லை.

இந்தியா எண்ணெய்க்கு விதித்த வரிகளை நீக்கவும், சில வரிகளை குறைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளன. தென் கொரியாவும் இதுபோன்ற நிவாரணங்கள் அந்நாட்டு மக்களுக்கு வழங்குகிறது. ஆனால் நமது நாட்டு ஜனாதிபதியும் அரசாங்கமும் தேர்தல் காலத்தில் கூறியவாறு எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை.

துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அதே விலைகளுக்கு பொற்றோலையும் டீசலையும் மக்களுக்கு பெற்றுத் தருவோம் என தேர்தல் மேடைகளில் பிரஸ்தாபித்தனர். ஆனால் செயலில் இது நடந்தபாடில்லை.

இப்போது விவசாயிகளும் கடுமையான சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். பெரும் போகத்தில் 8 இலட்சம் ஹெக்டேர் பயிரிடப்படுகின்றன. எதிர் வரும் சிறு போகத்தில் 5 இலட்சம் ஹெக்டேரில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படும்.

நீர் தட்டுப்பாட்டால் இது 5 இலட்சத்திற்கு கீழான மட்டத்திற்கு போகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இப்போது கூப்பன்களிலும் விவசாயிகளுக்கு எரிபொருள் கிடைத்தபாடில்லை .

போதுமான உரம் நாட்டில் இல்லை. யூரியா விலை ஒரு மெட்ரிக் டொன் முன்பு 400 டொலராக காணப்பட்டது. இப்போது 700 ஆகியுள்ளது. ரூ.9500 ஆக இருந்த உர மூட்டை ரூ.15000 தாண்டியுள்ளன.

எனவே இப்போதாவது அரசாங்கம் நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான உரத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உரத் தட்டுப்பாடு ஏற்பட்டால் விவசாய உற்பத்திகள் குறையும். விளைச்சலும் குறையும். இதனால் உணவுப் பாதுகாப்புக்கு கடும் அடி விழும். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்கம் எதிர்க்கட்சியின் யோசனைகளை நிராகரித்து, சேறு பூசி, விமர்சித்து வருகின்றது. நாட்டு மக்கள் கடைசியில் இந்த அரசாங்கத்தின் அலட்சியத்தால் நிராதரவாகிவிடுவார்கள்.

மின் வெட்டு தொடர்பில் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளன. ஏப்ரல், ஜூன், ஜூலை மூன்று மாதங்களில் பல மின் நிலையங்கள் பராமரிப்புக்காக செயலிழக்கப்படுவதால் இரவில் மிக அதிக தேவை இருக்கும்போதும் மின்சாரத்தைத் துண்டிக்க நேரிடும்.

இதற்கு காரணம் தரமற்ற நிலக்கரி பயன்பாடு என்றும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வந்த அனைத்து கப்பல்களிலும் தரமற்ற நிலக்கரி என்று நுரச்சோலை மின் நிலையத்தின் நேரடி அறிக்கைகளில் தெரிகிறது. குடிமக்களாக இந்த விடயங்களை அறிந்திருக்க வேண்டும்.

2019 இலும் 2024 இலும் மக்கள் ஏமாற்றப்பட்டனர். அசீமிதமான அழுத்தத்திற்கும் துயரத்திற்கும் மக்கள் ஆளாகியுள்ளனர். இந்த நேர்மையற்ற வீரர்கள் உண்மையான வீரர்கள் அல்ல, செயற்கையாக உருவாக்கப்பட்ட பொய்யான வீரர்கள் ஆவர். நாட்டிற்கு நேர்மையான வலுவான தலைமைத்துவமொன்று அவசியம்.

இப்போது நாட்டில் ஆடைத் தொழிற்சாலைகளும் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்படுகின்றன. ரணசிங்க பிரேமதாச காலத்தில் உருவாக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளும் கூட இப்போது மூடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

மூடப்பட்ட இந்த தொழிற்சாலைகள் நமது நாட்டை விட்டு ஏனைய நாடுகளில் இயக்கப்பட்டு வருகின்றன. 2019 இல் பெண்களின் சுகாதாரம் தொடர்பில் பேசியபோது எம்மீது பலவாறு சேறுபூசினர்.

பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக ஆரோக்கியத் துவாய்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இப்போது இது முன்னோடி திட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எம்மை விமர்ச்சித்தவர்களே இதனை முன்னெடுத்து வருகின்றனர். இதனைக் கண்டு நாம் மகிழச்சியடைகிறோம். எனவே இப்போதாவது மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது. உலகில் பல நாடுகள் நம்மை கடந்து முன்னேறி வருகின்றன.

இனி பொய் சொல்பவர்களால் ஏமாற வேண்டாம் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். மக்களுக்காக எடுக்கக்கூடிய எந்த நல்ல முடிவிற்கும் எதிர்க்கட்சி ஆதரவு வழங்கும்.

உர சிக்கலை தீர்க்க உரங்களுக்கு விதிக்கப்பட்ட வெட் வரியை நீக்கவும், உர மானியத்தை அதிகரிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திறைசேரியில் மேலதிக கையிருப்பில் காணப்படும் பணத்தை பயன்படுத்தி நாட்டு மக்கள் மீதுள்ள வரிச்சுமையை நீக்கி மக்களுக்கு நிவாரண தொகுப்பை அறிமுகப்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.