மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் நிலைமையினால் நமது நாட்டிற்கு ஏற்படும் தாக்கம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் செவ்வாய்க்கிழமை (03) கலந்துரையாடினர்.
இதன்போது தற்சமயம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து காணப்படும் போர்ச் சூழல் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன. ஈரான் மற்றும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு, நமது நாட்டில் இருந்து விசேட பல இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால், இது தொடர்பிலும் இங்கு விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்சமயம் தொழில் புரிந்து வரும் கிட்டத்தட்ட பத்து இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பிலும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. அவர்களின் உயிர் வாழ்வை பாதுகாத்துக் கொள்ளவும், அவர்களின் தொழில் நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதோடு, இந்த விடயத்தில் அரசாங்கத்திடம் அதிக அவதானம் செலுத்துவதற்குமான கருத்துக்களும் இங்கு தெரிவிக்கப்பட்டன.













