'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான மேன்முறையீடுகளைச் சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் தகுதி பெற்றுள்ள பயனாளிகளின் பெயர் பட்டியல் இன்று வெள்ளிக்கிழமை (27) முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள இந்தப் பெயர் பட்டியலில் உள்வாங்கப்படாதவர்கள் அல்லது தகுதியற்றவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகக் கருதுபவர்கள், அது தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை மூன்று முறைகளில் ஒன்றின் ஊடாகச் சமர்ப்பிக்க முடியும்.
01. https://eservices.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்று நேரடியாகச் சமர்ப்பிக்கலாம்.
02. www.wbb.gov.lk என்ற தளத்திலிருந்து படிவத்தைப் தரவிறக்கம் செய்தோ அல்லது அந்தந்த பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களிடம் படிவத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
03. பிரதேச செயலகத்தின் நலன்புரிப் பிரிவு உத்தியோகத்தர்களின் உதவியுடனோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொடர்பாடல் மையங்கள் (Communication Centers) ஊடாகவோ ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க முடியும்.
முக்கிய குறிப்புகள்
ஒரு நபர் ஒரு மேன்முறையீட்டை மாத்திரமே சமர்ப்பிக்க முடியும்.
தகுதியற்ற ஒருவர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால், அவருக்கு எதிராக அடையாளத்தை வெளிப்படுத்தாமலும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து மேன்முறையீடுகளும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




.webp)





.webp)


