அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் – ஆசிரியர் சங்கம் தகவல் !


கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் பதவிகளுக்கு, அச்சேவையைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகள் விண்ணப்பிக்க முன்வரவில்லை என்று ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில்,

கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்காக ஆரம்பத்தில் 352 அதிபர் பதவிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த வெற்றிடங்களின் எண்ணிக்கை 577 ஆக உயர்ந்துள்ளது. எனினும், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு குறித்த பதவிகள் தொடர்பாக எவரும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை.

இதன் காரணமாக நீண்ட காலமாக அதிபர் வெற்றிடங்கள் நிலவும் பல பாடசாலைகளில் தற்போது பதில் அதிபர்களே கடமையாற்றி வருகின்றனர். பதில் அதிபர்களால் பாடசாலை அபிவிருத்தி தொடர்பான முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இதனால் அந்த பாடசாலைகளின் முன்னேற்றமும் தடைப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வி நிர்வாக சேவைக்கு 225 பேர் உள்வாங்கப்பட்டுள்ள போதிலும் அதிபர் பதவிகளுக்கான கேள்வி குறைவாகவே காணப்படுகிறது. எனவே, இந்த பாடசாலைகளுக்கு மீண்டும் அதிபர் பதவிகளுக்கான தகுதியான அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.