புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் அரிசி விலை அதிகரிக்கப்பட மாட்டாது !


தமிழ்- சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் அரிசி விலை அதிகரிக்கப்பட மாட்டாது என விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் தேவையான அளவு அரிசி கையிருப்பில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர், சந்தையில் தற்போது அரிசி விநியோகம் சீராக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எம்மிடம் தாராளமான அளவில் நாட்டு அரிசி கையிருப்பில் உள்ளது. உண்மையில் தேவைக்கு அதிகமான நாட்டு அரிசி உள்ளது. கீரி சம்பா அரிசி தொடர்பில் சிறிய சிக்கல் நிலவினாலும், அதன் விநியோகத்தை உறுதி செய்வதற்காக தேவையான நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.தற்போதைய சந்தை விநியோகத்திற்காக கடந்த பருவத்தில் பெறப்பட்ட நெல் மற்றும் இந்த பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் ஆகிய இரண்டும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் மூலம் தட்டுப்பாடற்ற விநியோகத்தை உறுதி செய்ய முடியும் என அரசாங்கம் நம்புகிறது.அரிசி விலையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமாயின், அது போக்குவரத்து மற்றும் எரிபொருள் செலவுகளை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே அமையுமே தவிர, அரிசி தட்டுப்பாட்டினால் விலை அதிகரிக்காது என்பதை அவர் வலியுறுத்தினார்