
இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 08 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 809,595 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு வருகை தந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியப் பிரஜைகளாவர். அவர்களின் எண்ணிக்கை 167,095 ஆகும். இந்தியாவை தொடர்ந்து பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 68,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளமை தரவுகளின் மூலம் அவதானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.












