புத்தாண்டில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சோதனை - 1200 பேருக்கு வழக்கு


புத்தாண்டுப் பருவகாலத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள 21,796 நிறுவனங்களில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சோதனைகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், இதில் 2,300 பொது சுகாதாரப் பரிசோதகர்கள் பங்கெடுத்துள்ளதாகவும் அந்தச் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்தார்.

இந்தச் சோதனைகளின் போது 2,114 உணவு சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிகாரிகளால் 4,308 உணவுப் பொருட்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

அவற்றில் மனித நுகர்வுக்கு பொருத்தமல்லாத 3,044 உணவுப் பொருட்களை அழிப்பதற்கு பொது சுகாதாரப் பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறைபாடுகள் காணப்பட்ட 1,289 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் திட்டமிடப்பட்ட இந்தச் சோதனைகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், புத்தாண்டுப் பருவகாலம் முடியும் வரை தொடர்ச்சியாக இச்சோதனைகள் முன்னெடுக்கப்படும் என பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.