நுகர்வோர் பாதுகாப்பு ஏப்ரல் 30 வரை நீடிப்பு - முறைப்பாடுகளுக்கு 1977 ஐ அழையுங்கள்


புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் விசேட சோதனைகள் மற்றும் விசாரணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியமை தொடர்பில் சுமார் 2,000 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபையின் தகவல் மற்றும் நுகர்வோர் விவகார பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

இது குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பணிப்பாளர் அசேல பண்டார மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

புத்தாண்டு காலத்திற்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் விசேட சோதனைகள் மற்றும் விசாரணை வேலைத்திட்டத்தை நாம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்துவோம்.

இந்தத் திட்டத்தின் கீழ் குறிப்பாக விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை, அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், அத்துடன் சந்தையில் நுகர்வோரை பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக்குதல் மற்றும் நுகர்வோருக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தடுப்பதற்கான அவசியமான நடவடிக்கைகளை எமது அதிகாரிகள் முன்னெடுப்பார்கள்.

நுகர்வோர் சந்தையில் ஏதேனும் ஒரு வகையில் அநீதிக்கு உள்ளானாலோ அல்லது ஏதேனும் சிக்கல்கள் இருந்தாலோ, அது குறித்து அலுவலக நேரங்களில் அறிவிக்க முடியும். நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அந்தத் தகவல்களை வழங்க முடியும். அதற்கமைய அதிகாரிகள் அது தொடர்பான அவசியமான தலையீடுகளை மேற்கொள்வார்கள்' என அவர் குறிப்பிட்டார்.