கோழிப்பண்ணை உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்றவருக்கு 6 ஆண்டுகள் சிறை



கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட அதிகாரி ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு, மொனராகலை மாவட்டம் வெல்லவாய பகுதியில் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரிடம், இந்த அதிகாரி சட்ட விவகாரங்களைச் சாதகமாக முடித்துக் தருவதாக கூறி 15,000 ரூபாய் இலஞ்சமாக கோரியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக 2009 செப்டம்பர் 02 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு (CIABOC) முறைப்பாடொன்று அளிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான நீண்டகால விசாரணைகளின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை (23) தீர்ப்பை அறிவித்தது.

இலஞ்சம் கோரியமை மற்றும் பெற்றுக்கொண்டமை தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளில் சந்தேகநபர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 6 ஆண்டுகள் வீதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், இலஞ்சமாகப் பெறப்பட்ட 15,000 ரூபாய்க்கு இணையான மேலதிக அபராதத்தையும் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்த ஊழல் வழக்கு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முறையான விசாரணைகளின் ஊடாக நீதிமன்றத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.