சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமை சட்ட அதிகாரி விளக்கமறியலில்



சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமை சட்ட அதிகாரி (ஓய்வு) ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சட்ட அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில், சுகாதார அமைச்சிற்காகக் கட்டிடம் ஒன்றை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொடுத்துள்ளார்.

குறித்த குத்தகைக் காலத்தை நீடிப்பதற்காக மூன்று குத்தகை ஒப்பந்தங்களைத் தயாரித்தமைக்காக, அதற்குரிய கட்டணம் எனக் கூறி 4,134,887/- ரூபாயைக் கோரியுள்ளார். அதில் 2,000,000/- ரூபாயை ஏற்கனவே பெற்றுக்கொண்ட அவர், எஞ்சிய தொகையையும் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

எஞ்சிய தொகையிலிருந்து 5 இலட்சம் ரூபாயை, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரில் மக்கள் வங்கியில் பேணப்படும் கணக்கிலிருந்து வழங்கப்பட்ட காசோலை ஒன்றின் ஊடாக பணமாகப் பெற்றுக்கொண்ட போது, இலஞ்சம் கோரியமை மற்றும் பெற்றுக்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று (21) பிற்பகல் 3.45 மணியளவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து மே மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.