அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை




வீதிகளில் அதிகளவில் கரும்புகையை வெளியேற்றி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாகனங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மோட்டார் வாகனப் பரிசோதகர்களுடன் இணைந்து, அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைப் பொலிஸார் சோதனையிடவுள்ளனர். விதி மீறும் வாகனங்கள் உடனடியாகப் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் காற்று மாசுபாட்டினால் ஆண்டுதோறும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்நிலையைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

வீதிகளில் இவ்வாறான வாகனங்களைக் கண்டால், பொதுமக்கள் அது குறித்து உடனடியாக முறைப்பாடு செய்யலாம் என்று கூறியவர், பொதுமக்கள் 070 3500525 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு வாகனத்தின் இலக்கம் அல்லது வீடியோ காட்சிகளை அனுப்பி வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊடாக மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.