ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்திய சாரதி கைது



கம்பஹா - ஹின்னட்டியான மஹாகம பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு விழாவின் போது, பொதுமக்களுக்கும் சொத்துக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் மிகவும் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்திய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் பரவிய காணொளியின் அடிப்படையில், கொழும்பு போக்குவரத்துப் பிரிவு மற்றும் கட்டுநாயக்க பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சந்தேகநபர் புதன்கிழமை (22) கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை சொகுசு காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தாரா என்பதைக் கண்டறிய, நீர்கொழும்பு வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.