விலைவாசி நெருக்கடி: அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சஜித் பிரேமதாச


பொருட்களின் விலை உயர்வினால் நாட்டு மக்கள் மிகவும் அல்லல்பட்டுள்ள நிலையில், தாங்கள் தேர்ந்தெடுத்த ஜனாதிபதியும் அரசாங்கமும் இந்த விலைவாசி பிரச்சினைக்கு தீர்வுப் பெற்றுத் தருவார்கள் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தாங்கவியலாத அளவு மின்சார கட்டணம், எண்ணெய் விலை, எரிபொருட்கள் விலை, எரிவாயு விலை உயர்வு, உணவுப் பொருட்களின் விலை ஏற்றம், உர தட்டுப்பாடு போன்ற நிலைமைகளுக்கு மத்தியில் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை யோதகண்டிய போதி மஹா விஹாரை, யோதகண்டிய நாக மஹா விஹாரை மற்றும் சிதுல்பவ்வ மகுல் மஹா விஹாரைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (12) மேற்கொண்ட விஜயங்களுக்குப் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விலைவாசி அதிகரிப்புக்கு என்ன தீர்வை பெற்றுக் கொடுக்கப் போகிறீர்கள் என்று ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் கேள்வி எழுப்புகிறோம். இந்த தருணத்தில் எரிபொருட்கள், எரிவாயு விலையோடு மின்சார கட்டணங்களையும் குறைத்து, பொருட்களின் விலைகளையும் குறைத்து, உரம் மற்றும் மருந்துப் பொருட்களின் விலைகளையும் குறைத்து மக்களுக்கு வாழ்க்கையை கொண்டு நடத்த முடியுமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் மேடைகளில் வாக்குறுதிகள் பலவற்றை வீராப்பாக பிரஸ்தாபித்து, ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தால் இன்னும் இந்த விலைவாசி அதிகரிப்புக்குக் கூட தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முடியாதுபோயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.



நிலக்கரியில் ஊழல்.

அரசாங்கம் மக்கள் எதிர்பார்க்கும் பொருட்களின் விலைகளை குறைக்காவிட்டாலும் தமது சீடர்களை பயன்படுத்தி நிலக்கரி மோசடியை திறம்பட செய்துள்ளனர். முதலில் நிலக்கரி விடயத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்றனர். பின்னர் நிலக்கரியின் தரம் குறைவானது உண்மை தான், என்றாலும் இங்கு எந்த முறைகேடும் மோசடியும் நிகழவில்லை என்று தெரிவித்தனர். கணக்காய்வாளரின் அறிக்கை எதனை வெளியிட்டது. 24 மணி நேரமும் இவ்வாறு நாட்டை கேலிக்கு உட்படுத்துவது ஏன் என்று அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமும் கேட்கிறோம். இந்நாட்டில் சிறுவர்கள் முதல் ஒவ்வொரு குடிமகன் வரையிலும் இந்த நிலக்கரி தரம் குறைந்தது என்பதனை அறிந்தே வைத்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


நிலக்கரியால் ஏற்பட்ட நஷ்டத்தை நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக மக்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலக்கரி மோசடி தொடர்ந்து நிகழ்ந்தாலும் அதை நிறுத்த அரசாங்கம் முயற்சிக்கவில்லை. இதனால் 75 இலட்சம் மின்சார பாவனையாளர்களே பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு இந்த நிலக்கரி நஷ்டத்தால் ஏற்பட்ட நட்டத்தை மின்சார பாவனையாளர்களிடம் இருந்து அறவிட மாட்டோம் என்று கூறினாலும், இந்த நிலக்கரி மோசடியால் குறிப்பிட்ட அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாமல் போவதால், இந்த குறைந்த மின்சாரத்தை எரிபொருள் மின் நிலையங்களில் உற்பத்தி செய்ய வேண்டி காணப்படுவதனால், இதன் செலவு நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக மக்களாலயே தாங்க வேண்டி காணப்படுகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இவ்வாறு சென்றால் மக்களுக்கு வாழ முடியாது.

நிலக்கரியுடன் ஒப்பிடும்போது டீசல் மின் நிலையங்களில் ஒரு மின் யூனிட் உற்பத்தி செய்ய செல்லும் தொகை அதிகமாகும். ஒரு புறம் பொது பயன்பாட்டு ஆணைக்குழு இவ்வாறான பொது அறிவிப்பை செய்தாலும் இந்த தரம் குறைந்த நிலக்கரியை பயன்படுத்துவதால் ஏற்படும் நஷ்டம் மின்சார பாவனையாளர்கள் மீதே மறைமுகமாக சுமத்தப்பட்டுள்ளது. எனவே நமது நாட்டு மக்கள் அழுத்தத்திற்கும் துன்பத்திற்கும் வருத்தத்திற்கும் உள்ளான இந்த தருணத்தில் அவர்களின் அசௌகரியத்தை குறைக்கும் விதமாக இந்த எரிபொருட்கள், எரிவாயு, மருந்துகள், உரம், மின்சாரம் போன்றவற்றின் விலைகளை குறைக்க வேண்டும் என்றும், இவ்வாறு சென்றால் மக்களுக்கு வாழவே முடியாது போகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


மக்களை வாழ வைப்பதே அரசின் பொறுப்பாகும்.

மக்களை வாழ வைப்பதே அரசின் பொறுப்பாகும். இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி தேவையான ஒத்துழைப்புகளை இந்த அரசாங்கத்திற்குப் பெற்றுத் தரும். மக்களை வாழ வைக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் தலைமைத்துவத்தைப் வழங்க ஐக்கிய மக்கள் சக்தி என்றும் முன்வரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.