தமது கிராமம் அடிக்கடி மின்னல் தாக்கங்களுக்கு உள்ளாவதே இவர்களுக்குள்ள ஒரே பிரச்சினையாகும். இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இந்தக் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசிக்கின்றன. தேயிலை, கறுவா மற்றும் கோப்பிப் பயிர்ச்செய்கையே இவர்களின் பிரதான வாழ்வாதாரமாகும். இதன் காரணமாக இப்பகுதி மக்கள் பொருளாதார ரீதியாக ஸ்திரமான நிலையில் உள்ளனர்.
எனினும், மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள பிடகந்த கிராம மக்கள் எதிர்கொள்ளும் பெரும் சவாலாகத் தொடர்ச்சியான மின்னல் தாக்கங்கள் அமைந்துள்ளன. இது தொடர்பாக கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளுக்கு அறிவித்து, மின்னல் கடத்திகளை பொருத்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ள போதிலும், இதுவரை அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
அங்குள்ள பாடசாலை, விகாரை மற்றும் வீடுகள் என அனைத்து இடங்களும் அடிக்கடி மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகின்றன. கிராம மக்களின் கூற்றுப்படி, மின்னல் தாக்காத வீடுகளே அங்கு இல்லை எனும் நிலை காணப்படுகிறது. அத்துடன், மின்னல் தாக்கம் காரணமாக இதுவரை சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி இரவு, சித்திரை புத்தாண்டு பிறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், கடந்த 23 ஆம் திகதி கிராமத்து விகாரையின் மீது மின்னல் தாக்கியதில், அதன் விகாரதிபதி காயமடைந்து அயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமது உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்கும் வகையில், விரைவில் மின்னல் கடத்திகளைப் பொருத்தித் தருமாறு இக்கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.






.jpg)






