இலங்கைக்குள் கொக்கெய்ன் கடத்த முயன்ற 47 வயதுடைய உகாண்டா நாட்டுப் பெண் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவைச் (NCU) சேர்ந்த அதிகாரிகள், நுண்ணறிவு தகவல்கள் மற்றும் அபாய மதிப்பீட்டின் அடிப்படையில், கத்தார் எயார்வேஸ் QR664 விமானம் மூலம் தோஹா வழியாக இலங்கைக்கு வந்திருந்த சந்தேக நபரை ஞாயிற்றுக்கிழமை (12) காலை தடுத்துள்ளனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விரிவான சோதனையில், உடை உள்ளே திறமையாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கோகெய்ன் காப்ஸ்யூல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை மொத்தமாக சுமார் 274 கிராம் எடையுடையவை என்றும், அவற்றின் சந்தை மதிப்பு சுமார் 12.33 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவர் உடலினுள் கூடுதல் போதைப்பொருள் காப்ஸ்யூல்கள் உள்ளே எடுத்திருக்கக்கூடும் என்ற சந்தேகமும் சுங்க அதிகாரிகளுக்கு உள்ளது. இதனால், அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இலங்கை சுங்கத்துறை தெரிவித்ததாவது, இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இலங்கை சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கான இடைநிலை அல்லது இலக்கு நாடாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகும்.
மேலும், இந்த போதைப்பொருளின் மூலமும், விநியோக வலையமைப்பும், உள்ளூர் மற்றும் சர்வதேச தொடர்புடையவர்களும் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.













.jpg)