மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் !


நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த மானியத் திட்டம் ஏப்ரல் 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக மீன்பிடி அமைச்சு அறிவித்துள்ளது.

சிறிய படகுகளுக்கு ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபாய் மானியம் வழங்கப்படும். பலநாள் மீன்பிடி படகுகளுக்கு ஒரு பயணத்திற்கு 1,50,000 ரூபாய் மானியம் வழங்கப்படும்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதுடன், விநியோகத்திலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் உள்நாட்டு மீன்பிடித் துறை எதிர்கொண்டுள்ள பாரிய சவால்கள் குறித்து, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மீன்பிடித் தொழிலை விரைவாக இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதும், மீனவ சமூகம் எதிர்நோக்கும் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதுமே இந்த விசேட மானியத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலைத் தொடர்ந்தே இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.