515 பட்டதாரிகளுக்கு செவிலியர் நியமனம் வழங்கி வைப்பு



இந்நாட்டின் இலவச சுகாதார சேவையின் மனித வள தரம் மற்றும் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், 515 பட்டதாரிகளுக்கு செவிலியர் உத்தியோகத்தருக்கான நியமனக் கடிதங்கள் வெள்ளிக்கிழமை (29) உத்தியோகப்பூர்வமாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை மன்றம் வளாகத்தில் வெள்ளிக்கிழமை (29) இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. அரச பல்கலைக்கழகங்கள் மூலம் செவிலியர் பட்டப் படிப்பை நிறைவு செய்த, நாடளாவிய ரீதியிலுள்ள 31 அரச வைத்தியசாலைகளில் 6 மாத கால ஒழுங்கமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கே இவ்வாறு தரம் மூன்று செவிலியர் உத்தியோகத்தர்களாக நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள தேசிய, போதனா மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்களின் அடிப்படையில் இவர்கள் பணி அமர்த்தப்படவுள்ளனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, 2025 முதல் 2029 ஆம் ஆண்டு வரையான அரசாங்கத்தின் முதல் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் செவிலியர் சேவைக்கு புதிதாக 13,600 பேரை இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இன்று வழங்கப்பட்ட 515 நியமனங்களுடன் அந்த இலக்கின் 30 வீதம் பூர்த்தியடைந்துள்ளதுடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வழங்கப்படவுள்ள மேலும் 2,867 நியமனங்களுடன் இவ்வருட இறுதிக்குள் 50 வீத இலக்கு எட்டப்பட உள்ளது என்றார்.