
மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைச் சேவைகளை மேலும் திறம்பட முன்னெடுப்பதற்காக, சுகாதார அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மத்தியில் அதிகமாகக் காணப்படும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவதற்காக அரச வைத்தியசாலைகளுக்கு 765 மில்லியன் ரூபா பெறுமதியான 5 அதிநவீன 'மெமோகிராபி' இயந்திரங்களை வழங்குவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தலா 153 மில்லியன் ரூபாய் பெறுமதியான இவ்வியந்திரங்களுக்கான நிதியை சுகாதார தொகுதி மேம்பாட்டுத் திட்டமும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் வழங்கியுள்ளன.
இவ்வியந்திரங்கள் கொழும்பு, கண்டி, காலி கராப்பிட்டிய ஆகிய தேசிய வைத்தியசாலைகளுக்கும், அனுராதபுரம் போதனா வைத்தியசாலை மற்றும் அபெக்ஷா புற்றுநோய் வைத்தியசாலைக்கும் வழங்கப்படவுள்ளன.
இதற்கு மேலதிகமாக, அவசரத் தேவைகளுக்காக திருகோணமலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட இரு இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
தற்போது நாடு முழுவதும் 16 மெமோகிராபி இயந்திரங்களே இயங்குநிலையில் உள்ளதுடன், புதிய இயந்திரங்களுடன் இந்த எண்ணிக்கை 23 ஆக அதிகரிக்கும். தற்போது அரச வைத்தியசாலைகளில் இப்பரிசோதனைக்காக சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை நீண்ட காத்திருப்புப் பட்டியல்கள் காணப்படுகின்றன.
சுகாதார வழிகாட்டல்களின்படி நோயாளர் பதிவாகி சில நாட்களுக்குள் பரிசோதனைகள் நிறைவடைய வேண்டும் என்ற போதிலும், போதிய வசதியின்மையால் தாமதங்கள் ஏற்படுகின்றன. எனவே, இந்த நவீன இயந்திரங்களின் வருகையானது நோயாளர்களின் காத்திருப்புப் பட்டியலைக் குறைத்து, மக்களுக்கு தரமான, விரைவான சுகாதாரச் சேவையை உறுதி செய்ய வழிவகுக்கும்.







.jpg)


.jpg)

