குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் கைது


குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று (14) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

மென்பொருள் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவதாகக் கூறி, அரசாங்க நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, திணைக்களத்தில் புதிய மென்பொருள் கட்டமைப்பு ஒன்றினைச் செயல்படுத்துவதற்காக 9.8 மில்லியன் ரூபாவிற்கும் அதிகப்படியான நிதி செலவிடப்பட்டதாக சந்தேகநபர் எழுத்துப்பூர்வமான பிரகடனம் ஒன்றைச் சமர்ப்பித்திருந்துள்ளார்.

எனினும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் அத்தகைய மென்பொருள் கட்டமைப்பு எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும், போலியான ஆவணங்கள் மூலம் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களை இழைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலேயே இந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. இந்த ஊழல் விவகாரத்தில் வேறு அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து சி.ஐ.டியினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.