கைதிகளுக்கு போதைப்பொருள் மற்றும் சிகரெட் வழங்கிய குற்றச்சாட்டு - இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்


சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களுக்குத் தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருக்க அனுமதித்த குற்றச்சாட்டின் கீழ், மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும், இரண்டு சிறைகளில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களுக்குப் ஹெரோயின் போதைப்பொருள், சிகரெட்டுகள் மற்றும் லைட்டர்கள், புகையிலை துண்டுகள் போன்ற பொருட்களை வைத்திருக்க அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், போதைப்பொருள் பயன்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஈயத்தாள்கள் மற்றும் குழாய் வடிவில் சுருட்டப்பட்ட பணத்தாள்களையும் சிறைகளுக்குள் வைத்திருக்க இவர்கள் அனுமதி அளித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பேலியகொடை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று குறித்த சிறைக்கூண்டுகளைச் சோதனையிட்ட போதே, அங்கிருந்து இந்தத் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்தே குறித்த இரண்டு கான்ஸ்டபிள்களுக்கும் எதிராக இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.