போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது



பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் திடீர் சோதனையின் போது, போதைப்பொருட்களுடன் பல்கலைக்கழக ஒழுக்காற்று பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் மார்கஸ் பெர்னாண்டோ விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது இவர்கள் பிடிபட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் இருவர், ஹஷிஷ் போதைப்பொருள் மற்றும் 40 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டு, பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து மொத்தம் 7,530 மில்லிகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதாவது ஒரு மாணவரிடம் 3,410 மி.கி ஹஷிஷ் மற்றும் 20 வெளிநாட்டு சிகரெட்டுகளும்.மற்றொரு மாணவரிடம் 4,120 மி.கி ஹஷிஷ் மற்றும் 20 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இருவரும் 23 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கோட்டை மற்றும் மீரிகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல்கலைக்கழகத்தினுள் அதனை விற்பனை செய்யவும் முற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னரும் பேராதனை பல்கலைக்கழக விடுதி ஒன்றில் மாணவர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாகக் கிடைக்கும் தகவல்களை அடுத்து, ஒழுக்காற்று பாதுகாப்புப் பிரிவினர் இவ்வாறான சுற்றிவளைப்புகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.