உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் தொடர்பு இருந்தது மறுக்க முடியாது விதர்ஷன கன்னங்கர குற்றச்சாட்டு -


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே பிரதான சூத்திரதாரி மற்றும் மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் நேரடி அரசியல் வழிகாட்டல் இருந்ததை மறுக்க முடியாது என ஜனபலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனபலய அமைப்பினால் பொரளை என்.எம். பெரேரா கேந்திர மத்திய நிலையத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே பிரதான சூத்திரதாரி என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்ட சட்ட ரீதியான உண்மையாக மாறியுள்ளது. அசாத் மௌலானாவின் வாக்குமூலங்கள் அதனை தெளிவாகப் புலப்படுத்துகின்றன.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் நேரடி அரசியல் வழிகாட்டல் இருந்ததை மறுக்க முடியாது.

பொதுஜன பெரமுனவின் பாணந்துறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், பிள்ளையானைச் சந்திப்பதற்காகத் தாங்களும், மஹிந்த ராஜபக்ஷவும், பஷில் ராஜபக்ஷவும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்றதை வெட்கமில்லாமல் நாமல் ராஜபக்ஷ அங்கு பெருமையுடன் ஒப்புக்கொண்டுள்ளார்.

'நாங்கள் சென்றோம், அது சுவரேறி குதித்துச் சென்றதல்ல, அதிகாரிகளுடன் முறையான அனுமதி பெற்றுத்தான் சென்றோம்' என்று அவர் சவால் விடுக்கும் தொனியில் பேசியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு வந்ததன் பின்னர் வெளிப்படுத்துவதால் நாமல் தன்னை நியாயப்படுத்திக்கொள்ள முடியாது. புத்தக வெளியீடுவதால் இவர்களை பாதுகாக்க முடியாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட பிள்ளையான் போன்றவர்களுடன் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஏன் இவ்வளவு நெருக்கமான உறவைப் பேணினார்கள்? பிள்ளையானைச் சந்திக்கச் சென்றது என்பது வெறும் விஜயம் அல்ல. அது ஒரு அரசியல் திட்டமிடல். கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கான திட்டத்துக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே அவர்கள் அங்கு சென்றார்கள் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

சிறையிலிருந்த பிள்ளையான், தன்னிடம் தற்கொலைத் தாக்குதலுக்குத் தயாராக ஒரு குழு இருப்பதாகவும், அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் செய்தியை சுரேஷ் சலே ஊடாக ராஜபக்ஷ குடும்பத்து அனுப்பியதன் பின்னரே இந்தச் சந்திப்புகள் அரங்கேறின. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, தாஜுதீன் படுகொலை மற்றும் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் போன்ற மனித நேயத்துக்கு எதிரான குற்றங்களுக்கு தாங்களே பொறுப்பு என்பதை நாமல் ராஜபக்ஷ இனிவரும் காலங்களில் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். இத்தகைய பாரிய குற்றங்களைச் செய்தவர்களுக்கு எதிராக சட்டம் சுயாதீனமாகச் செயற்பட வேண்டும்.

ராஜபக்ஷ குடும்பத்தினரின் இந்த அரசியல் வங்குரோத்துத்தனம் தான் நாட்டை இன்று இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. பிள்ளையானைச் சந்தித்தது மட்டுமல்ல, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகளுடன் இவர்கள் கொண்டிருந்த தொடர்புகள் அனைத்தும் இன்று சட்டபூர்வமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளன. எனவே, இந்தச் சந்திப்புகள் குறித்து நாமல் ராஜபக்ஷ வெறும் பேச்சுக்களைப் பேசுவதை விடுத்து, அந்தச் சந்திப்பின் உண்மையான பின்னணியையும், அதற்குப் பின்னால் இருந்த அரசியல் சதித்திட்டத்தையும் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.