மட்டக்களப்பில் பௌர்ணமி தினத்தில் மது விற்ற பெண் கைது


மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள யூனியன்கொலனி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பௌர்ணமி தினத்தில் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வீடு ஒன்றை நேற்று சனிக்கிழமை (30) இரவு பொலிஸார் முற்றுகையிட்டனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்றைய தினம் இரவு போதை ஒழிப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை.விஜயராஜா தலைமையிலான குழுவினரே குறித்த வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது, அங்கிருந்து 72 பியர் ரின்கள், 25 மதுபான போத்தல்களை கைப்பற்றியதுடன், இச்சம்பவத்தோடு தொடர்புடைய 42 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.