நாடு முழுவதும் அதிரடிச் சோதனை : பெருமளவு சட்டவிரோத மதுபானங்களுடன் ஐவர் கைது!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை (13) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்போது, சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, ராகமை - பொடிவீகும்புர பகுதியில், வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 225 லீற்றர் (300 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் ராகமை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் ராகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வயிக்காலை பகுதியில் பாரிய அளவிலான சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து 1,620 லீற்றர் (08 பீப்பாய்கள்) கோடா மற்றும் மதுபானம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்கள் வயிக்காலை பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

அதேநேரம், மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹல குடாவெவ பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 75 லீற்றர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் குடாவெவ பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பல்லேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்போலான பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 72 லீற்றர் (96 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பல்லேவெல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.