எல்ல சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் காதலர்களை அச்சுறுத்திய இருவர் கைது..



எல்ல சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் இளம் காதலர்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்களை இழைத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஹாலி-எல பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 28 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் ஒரு சந்தேகநபர், ஒரு இளம் ஜோடியை அச்சுறுத்தி, அங்கிருந்த யுவதியை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளதோடு, மற்றுமொரு ஜோடியிடமிருந்து சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களையும் கொள்ளையடித்துள்ளார்.

அத்துடன், மேலும் பல ஜோடிகளிடமிருந்து கைத்தொலைபேசிகள் மற்றும் பல்வேறு சொத்துக்களை இவர்கள் கொள்ளையடித்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.