மட்டக்களப்பு - ஏறாவூரில் கைக்குண்டு மீட்பு


மட்டக்களப்பு, ஏறாவூர் ஐயங்கேணி பகுதியில் நீர் தேங்கியிருந்த இடமொன்றிலிருந்து பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்று நேற்று (13) புதன்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று காணப்படுவதாகப் பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து, ஏறாவூர் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது, அங்கு பழுதடைந்த நிலையில் கைக்குண்டு ஒன்று இருப்பதை பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

மீட்கப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்காக வவுணதீவு விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவைப் பெற்று, குறித்த குண்டை பாதுகாப்பான முறையில் வெடிக்க வைத்துச் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.