பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களுடன் கைது


வெசாக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட பொதுமக்களுக்குப் பெரும் அசௌகரியம் மற்றும் இடையூறு ஏற்படும் வகையில், அதிக சத்தத்தை எழுப்பக்கூடியவாறு சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களினால் செலுத்தப்பட்ட குறித்த மோட்டார் சைக்கிள்களும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பெரும்பாலான மோட்டார் சைக்கிள்களின் 'சைலன்ஸர்கள்' எனப்படும் புகைக்குழாய்கள் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டு அல்லது மாற்றியமைக்கப்பட்டு, மிக அதிகளவிலான சத்தத்தை எழுப்பக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் நடைமுறையிலுள்ள மோட்டார் போக்குவரத்துச் சட்டங்களை முற்றாக மீறும் வகையில், பல்வேறு உதிரிப்பாகங்கள் இந்த மோட்டார் சைக்கிள்களில் தேவையற்ற முறையில் சேர்க்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பண்டாரகம நகரப் பகுதியில் போக்குவரத்துப் பாதுகாப்புப் கடமைகளில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளினாலேயே இந்த மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் பொலிஸ் பிணையில் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் அடுத்தகட்டமாக மோட்டார் வாகனப் பரிசோதகரின் உத்தியோகபூர்வ பரிசோதனைக்காக முன்வைக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் உரிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, குறித்த மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பண்டாரகம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.