25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது


கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ரயிலில் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளை வியாபாரத்துக்காக எடுத்துச்சென்ற பெண் ஒருவர் கருவப்பங்கேணியில் இன்று திங்கட்கிழமை (8) காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் ஊழல் ஒழிப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று காலை 7.30 மணியளவில் குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றை பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினர் முற்றுகையிட்டனர்.

இதன்போது கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் இருந்து வியாபாரத்துக்காக மட்டக்களப்புக்கு ரயிலில் இன்று காலை ஐஸ் போதைப்பொருளைக் கொண்டுசென்று, அதனை வியாபாரத்துக்காக வீட்டில் மறைத்து வைத்திருந்த நிலையில் அப்பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

29 வயதுடைய அப்பெண், 2 பிள்ளைகளின் தாய் என்றும் அவரது கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் வேலை செய்து வருபவர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அண்மைக்காலமாக அப்பெண் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்டவருக்கு வேறு எந்தெந்த போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்புள்ளது, யார் யாருடன் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் போன்ற உண்மைகளை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்.

கைதான பெண்ணை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நடத்தி வருகின்றனர்