எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைப் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயக் கையிருப்புக்கள் முற்றாக இல்லாத நிலை காணப்பட்டது என்றும், எனினும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் போது மகா திறைசேரியில் 800 பில்லியன் ரூபாய் கையிருப்பு இருந்தது என்றும் தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் அதனை ஒரு வருடத்திற்குள் 900 பில்லியன் ரூபாயாக உயர்த்தியதாக எண்களைக் காட்டிப் பிரசாரம் செய்திருந்தாலும், தற்போது மகா திறைசேரியின் கையிருப்பு 620 பில்லியன் ரூபாயாகக் குறைவடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 986 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்த போதிலும், அந்த நிதி எங்கே போனது என்று தெரியவில்லை என்றும், டொலரின் மதிப்பை செயற்கையாகக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மே மாதத்தில் மாத்திரம் 223 மில்லியன் டொலர்கள் அரசாங்கத்தின் வெளிநாட்டு கையிருப்பிலிருந்து சந்தைக்கு விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அரசாங்கம் தமக்கிருந்த ரூபாய் கையிருப்பையும் அழித்து, வாகன இறக்குமதி மூலம் கிடைத்த பாரிய வரி வருமானத்தையும் வீணடித்துள்ளதுடன், இந்த நிதியைக் கொண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்றும் அவர் சாடினார்.
அத்துடன் மின்சார சபை, இலங்கை விமான சேவைக்கு 20 பில்லியன் வழங்கப்பட்ட போதிலும் அது உள்ளிட்ட கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் மற்றும் சீனித் தொழிற்சாலை என்பன தற்போதைய ஆட்சியில் பாரிய நஷ்டத்தையே எதிர்நோக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அரசாங்கத்திற்கு நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்றார்.
மேலும், நீதிமன்றங்கள், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நிலவும் நீதிபதிப் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இதன் மூலம் நாட்டின் சட்ட நிர்வாகம் திட்டமிட்டு முடக்கப்பட்டு, தேர்தல் செயல்முறைகளும் சீர்குலைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நாட்டின் ஜனநாயகம், சட்ட ஒழுங்கு, எரிபொருள் விலை மற்றும் ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்த முடியாத ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தம்மால் இயலாவிட்டால் பதவியை விட்டு விலகுவதாகக் கூறிய வாக்குறுதிக்கு இணங்க உடனடியாக வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு செல்லாது இன்னும் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதற்கான காரணத்தை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதேவேளை மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா பலாத்காரமாக அரச அதிகாரத்தைக் கைப்பற்றக் கனவு காண்பதாகவும், எனவே ரில்வின் சில்வா கூறுவதையா அல்லது தான் நாட்டுக்குக் கூறிய வாக்குறுதியையா ஜனாதிபதி செய்யப்போகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 9 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்பு இலக்கை இன்னும் எட்டவில்லை என்றும், தற்போது 6.7 பில்லியன் டொலர் கையிருப்பே காணப்படுவதாகவும், கடந்த காலத்தில் வரலாற்றில் இல்லாதவாறு பெருமளவு பணம் வீணடிக்கப்பட்டு அதன் சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் குறித்துப் பேசிய அவர், ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக இருப்பதாகவும், இந்த விவகாரம் அரசியல் நாடகமாக்கப்படுவதால் பிரச்சினை அதிகரித்துள்ளதே தவிர தீர்வு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். அத்துடன் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலேக்கு சிறைச்சாலையில் சித்திரவதைகள் செய்யப்படுவதாகவும், அவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தண்டிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி முழுமையாக எதிர்ப்பதாகக் கூறினார்.
சுரேஷ் சலே தவறு செய்திருந்தால் அவருக்கு சட்டப்படி முறையான விசாரணை மூலம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், ஆனால் நீதிமன்ற விசாரணைக்கு முன்னரே அரசாங்கமும் எதிர்க்கட்சியின் ஒரு குழுவும் இணைந்து தயாரித்த திரைக்கதைக்கு இணங்க அவரை குற்றவாளியாக்க முயல்வதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கத்திடம் கைது செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியல் ஒன்று உள்ளதாகத் தெரிவித்த அவர், கைதிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்களையும் அநாகரிகமான சித்திரவதைகளையும் வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார். சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் முட்டுக்கட்டை போடாது என்றும், ஆனால் விசாரணைகள் நியாயமான முறையில் அமைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இறுதிவரை ரணவீரர்களுக்கு எதிராகப் பேசாத தமது கட்சி, தற்போதைய அரசாங்கத்தால் சீர்குலைக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகள் மற்றும் ரணவீரர்களின் சுதந்திரமான பணிச் சூழலை மீண்டும் நிலைநாட்டத் தொடர்ந்து போராடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.







.jpg)



.jpeg)

.jpeg)